Thursday, June 11, 2015

காணி நிலம் வேண்டும் பராசக்தி

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும் - அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்ய நிறத்தினவாய் - அந்தக்
காணி நிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தர வேண்டும் - அங்கு
கேணி அருகினிலே தென்னைமரம்
கீற்றும் இளநீரும்

பத்துப் பனிரெண்டு தென்னைமரம்
பக்கத்திலே வேணும் நல்ல
முத்துச் சுடர்போலே நிலாவொளி
முன்பு வர வேணும் அங்குக்
கத்தும் குயிலோசை சற்றே வந்து
காதிற் படவேணும் என்றன்
சித்த மகிழ்ந்திடவே நன்றாயிளந்
தென்றல் வரவேணும்

பாட்டுக் கலந்திடவே அங்கே யொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே கவிதைகள்
கொண்டு தரவேணும் அந்தக்
காட்டு வெளியினிலே அம்மா நின்றன்
காவலுற வேணும் என்றன்
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தைப்
பாலித்திட வேணும்.
-பாரதி